யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இரும்பாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியில் வசித்து வந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
கடந்த நவம்பர் 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் அந்த யுவதி மூச்சு விடுவதில் சிரமப்பட்டபோது, நோயாளர் காவு வண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த ஊழியர்கள் யுவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துத் திரும்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆரம்பத்தில் நடந்த மரண விசாரணைகளின்போது, உயிரிழந்த யுவதிக்கு ஆஸ்துமா நோய் இருந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

எனினும், யுவதியின் சடலம் மீது உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவரது உடல் முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதற்கான கண்டல் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளிலேயே அதிர்ச்சிமிக்க தகவல்கள் வெளியாகின.
குறித்த யுவதி தாய் – தந்தை இல்லாத நிலையில், தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 8ஆம் திகதி இவர் சகோதரிக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் திரும்பி வந்துள்ளார்.
இதன் காரணமாக, யுவதியின் தாயின் தம்பியான (தாய்மாமன்) நபர், பச்சை பனை மட்டையால் யுவதியைக் கடுமையாகத் தாக்கிய விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னரே நவம்பர் 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் யுவதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் அவர்கள் மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை நடத்திய கோப்பாய் பொலிஸார், யுவதியின் தாய்மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதாரப் பணியாளராகப் பணிபுரியும் அந்த நபரை நேற்று கைது செய்தனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A 24-year-old woman from Irumpalai, Kopay East, died under mysterious circumstances, and her maternal uncle was arrested by the Kopay Police yesterday. Initial reports suggested the victim, who lived with her sister, might have died from asthma after experiencing breathing difficulties on November 9th. However, a post-mortem examination revealed severe assault marks on her body. Subsequent inquiries uncovered that the woman’s uncle, a health worker at the Jaffna Teaching Hospital, had violently beaten her with a palm stalk after she left the house without informing her sister on November 8th, leading to her death. The police arrested the uncle and are taking steps to produce him before the Mallakam court.



