பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயே குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தின் ஜப்பார் காலனியில் நடந்துள்ளது. 30 வயதான ஆர்த்தி என்பவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்திற்குப் பிறகு சில நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, குழந்தை திடீரென அழத் தொடங்கியுள்ளது. அப்போது, ஆர்த்தி குழந்தையை எடுத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், குளிர் தாங்க முடியாமல் குழந்தை சத்தமாகக் கதறி அழுதிருக்கிறது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சமையலறைக்கு ஓடிவந்த மாமியார், குழந்தையைத் தேடியுள்ளார். எங்கும் காணாததால், சந்தேகத்தின் பேரில் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக குழந்தையை மீட்டு, உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளது.
பொலிஸார் நடத்திய விசாரணையில், “குழந்தை நீண்ட நேரமாக அழுதுகொண்டே இருந்ததால், அது தூங்குவதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன்” என்று தாய் ஆர்த்தி கூறியுள்ளார். இது பொலிஸாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குடும்பத்தினர் கூறுகையில், “குழந்தையின் தாய் பேய் பிடித்தது போல நடந்து கொள்கிறார்” என்று கூறி அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று மந்திரம் போட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆர்த்திக்கு மன அழுத்தம் இருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், அவர் மனநல மருத்துவர் மற்றும் போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ‘பிரசவத்திற்குப் பிந்தைய மனநோய்’ (Postpartum psychosis) இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது, அவருக்கு அதற்கான சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்த சில தாய்மார்களுக்கு ஏற்படும் லேசான மனநிலை மாற்றங்கள் ‘பேபி ப்ளூஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த மனநோயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் ஆண் குழந்தை வேண்டி பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரத்தில் தாயே குழந்தையைக் கொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மற்றொரு சோகமான சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
A mother in Uttar Pradesh, India, placed her 15-day-old infant in a refrigerator because the baby wouldn’t stop crying. The grandmother found the baby and immediately took it to a hospital. A police investigation revealed that the mother was suffering from postpartum psychosis, a serious mental health condition that can affect new mothers. The woman is now receiving treatment, and doctors have warned about the dangers of this condition, emphasizing the importance of seeking professional help for mothers experiencing such symptoms. This incident follows a similar, tragic event in the same state.