இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் இன்று (22) காலையில் ஒருவர் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 6.30 மணியளவில், ஒரு நபர் மரத்தின் மீது ஏறி சுவர் மீது குதித்து நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்துள்ளார்.
சுவர் தாண்டி குதித்த நபர்
ரயில் பவன் பகுதியில் இருந்து சுவர் தாண்டி குதித்து நுழைந்த அந்த நபர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கருடா வாயில் அருகே சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் (21) முடிந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு பாதுகாப்பு மீறல் சம்பவம் நடந்தது. அப்போது 20 வயதுடைய ஒரு நபர் நாடாளுமன்ற வளாகத்தின் அனெக்ஸ் கட்டிடத்தின் உள்ளே சுவர் ஏறி குதித்து ஊடுருவினார். இந்தச் சம்பவத்தின் காணொலியும் வெளியானது. அவரை சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கைது செய்தனர். அவரிடம் எந்த ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்ற ஒரு அத்துமீறல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.