விமான சக்கரத்தில் பயணித்தபடி சிறுவன் இந்தியாவிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, விமானப் பயணம் என்பது கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்பட்டது. ஆனால், சிறுவன் ஒருவன் விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, KAM ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம், இந்தியாவின் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானம் தரையிறங்கிய பின்னர், அதன் சக்கரப் பகுதியில் இருந்து ஒரு சிறுவன் பாதுகாப்பான நிலையில் இறங்கி, விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்வதை ஊழியர் ஒருவர் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.
விமான நிலைய அதிகாரிகள் அந்த 13 வயது சிறுவனிடம் விசாரித்தபோது, ஈரானுக்குச் செல்லத் திட்டமிட்டதாகவும், தவறுதலாக வேறொரு விமானத்தில் ஏறி இந்தியா வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சிறுவன் என்பதால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இச்சம்பவம் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிறுவன் உயிர் பிழைத்தது எப்படி?
10,000 அடிக்கு மேல் விமானம் பறக்கும்போது, ஆக்ஸிஜன் அளவு குறைவாகவும், வெப்பநிலை -40°C முதல் -60°C வரையிலும் இருக்கும். இதனால் மயக்கம் அல்லது மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் ஒருவர் உயிர்வாழ்வது சாத்தியமற்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன், “விமானம் புறப்பட்டதும், சக்கரங்கள் உள்ளிழுக்கப்பட்டு சக்கர அறை மூடப்படும். அந்த அறைக்குள் கபினுக்குள் இருக்கும் வெப்பநிலை இருந்திருக்கலாம். இல்லையெனில், 30,000 அடி உயரத்தில் உயிர்வாழ்வது சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.
விமான சக்கரத்தின் மூலம் பயணிப்பவர்களில் ஐந்து நபர்களில் ஒருவரே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவில் நடந்த இரண்டாவது சம்பவம். இதற்கு முன்னர், 1996ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி, டெல்லியிலிருந்து லண்டனுக்குச் சென்ற விமானத்தின் சக்கரத்தில் இரண்டு சகோதரர்கள் பயணித்தனர். அதில் ஒருவரான பிரதீப் சைனி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றவர் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________
A 13-year-old boy from Afghanistan survived a flight to India by clinging to the wheel well of a plane. The boy, who intended to travel to Iran, was found by airport staff after the flight landed in Delhi. Despite the extremely low temperatures and lack of oxygen at high altitudes, the boy survived, which medical experts consider almost impossible. An aviation expert suggested that the boy might have been in a heated part of the wheel compartment, which could have saved his life. This is the second such incident in India, following a similar case in 1996 where one of two brothers survived a flight to London.