வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம், பெரியகுளத்தைச் சேர்ந்த 45 வயதான ச.ரவிக்குமார் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த இவர், அன்று இரவு பணி முடிந்து வெளியே சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள பாலத்திற்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திற்கு அருகில் வாகனத்தின் உதிரிப்பாகங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.
இதனால், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி காவல்துறையினர் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.