பெலாரூஸில் சிக்கிய லொக்குபெட்டி எனப்படும் சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான லொக்குபெட்டி, தற்போது பெலாரூஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்படாமல் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.
மேலும், லொக்குபெட்டி தொடர்பாக பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுவதாகவும் அதற்கெதிராக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தளாயில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்ட விவரங்களை தெரிவித்தார்.
இலங்கையில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லொக்குபெட்டியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதையும், அந்நாட்டு நாடு கடத்தல் சட்டத்தின் அடிப்படையில் அவரை இலங்கைக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.